வவுனியா, தரணிக்குளம், குறிசுட்ட குளம் நீரேந்து பகுதியில் இருந்து மீட்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என ஈச்சங்குளம் பொலிசார் இன்று (18.11) தெரிவித்தனர்.
தரணிக்குளம் குறிசுட்ட குளத்தின் நீரேந்து பகுதியில் நீரில் மிதந்த நிலையில் அழுகிய நிலையில் காணப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பாக அப் பகுதி மக்களால் கடந்த 14 ஆம் திகதி ஈச்சங்குளம் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை பார்வையிட்டதுடன், அதனை மீட்டனர். குறித்த சடலமானது இரண்டு கைகளும், ஒரு காலும் இல்லாத நிலையில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டது.
குறித்த சடலம் தொடர்பில், யுவதிகள் காணாமல் போனமை தொடர்பில் வவுனியாவில் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்த நான்கிற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ள போதும் குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இது குறித்த விசாரணைகளை தடவியல் பொலிசாரின் உதவியுடன் ஈச்சங்குளம் பொலிசார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.