தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளி அடுத்துள்ள திருச்சென்னம் பூண்டி பகுதியை சேர்ந்தவர் வி.எஸ்.எல்.குமார் என்கிற முருகையன். இவர் மீது திருக்காட்டுப் பள்ளி காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருக்காட்டுப்பள்ளியில் தாதாவாக வலம் வருவதில் இவருக்கும். மற்றொரு தரப்பினருக்கும் இடையே போட்டி நிலவி வந்ததாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், திருக்காட்டுப்பள்ளியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் குமார் தனது வீட்டிற்கு சென்று இருக்கிறார். அவரை 3 பைக்குகள், ஒரு காருடன் பின் தொடர்ந்த மர்ம நபர்கள், அவரது இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த குமாரை அந்த கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது.
இதில் தலை துண்டான நிலையில், குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர். திருக்காட்டுப் பள்ளி பகுதியில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. குமார் கொலையை தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர்.