புதுச்சேரி கோவிந்தசாலை பகுதியைச் சேர்ந்தவர் பரத் (32). பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.
வழக்கம் போல இன்று காலை ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த போது அங்கு மற்றொரு ஆட்டோவில் பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் கொண்ட கும்பல் வந்து இறங்கியது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பரத் உயிர் பயத்தில் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். ஆனால், அந்த கும்பல் விடாமல் துரத்தி சென்று அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த பரத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பரத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இந்திரா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.